இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததில் இருந்து ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தனது குழந்தையுடன் தாய் 60 அடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி நதியா. இத்தம்பதியினருக்கு ரித்திகா(7) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் 40 நாட்களுக்கு முன் நதியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்து கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மச்சம்பட்டு பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு காவல் பணியில் இருக்கும் உமாபதியின் சகோதரி செல்வி வீட்டிற்கு கணவன், மனைவி குழந்தைகளுடன் நேற்று வந்தனர்.
அங்கும் கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நதியா, பிறந்து 40 நாளே ஆன தனது குழந்தையுடன் 60 அடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு உமாபதி தகவல் தெரிவித்தார். அத்துடன் பொதுமக்கள் உதவியுடன் தனது மனைவி, குழந்தை உடல்களை மீட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து உமாபதி மற்றும் அவரது சகோதரி செல்வி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.