கள்ளக்குறிச்சி வன்முறை, மாணவி மரணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அறிக்கை

கள்ளக்குறிச்சி வன்முறை, மாணவி மரணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?-  உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சின்ன சேலம் அடுத்த கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்தவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

மாணவியின் உடற்கூராய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டதாக கூறி, அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். பிரேத பரிசோதனை ஆவணங்கள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் காவல்துறை தரப்பிலான அறிக்கை ஒன்றை மூடி முத்திரையிட்ட உறையில் அவர் தாக்கல் செய்தார். மாணவி மரணம் குறித்த வழக்கில் டி.ஐ.ஜி. தலைமையில், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் இணையதளங்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் காவல்துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

மேலும், மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. மற்றொரு குற்ற வழக்கில் பள்ளி தாளாளருக்கு தொடர்பு உள்ளதால் அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசால் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணாக்கர்களுக்கு கடந்த 27-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளதாகவும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிலைமையை சரி செய்ய இரண்டு வாரங்கள் ஆகும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது, விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிலும் விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் மிக அவசியம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.


இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டாமென அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவற்றிற்கு அறிவுறுத்தியதுடன், அவை தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இதுதொடர்ந்து முன்னிலைப் படுத்தப்படுவதால், அவற்றை பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலை மேலும் மோசமாவதாக ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் மாணவர்களை படிக்கும் இயந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புற சூழலை ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் அறிவுறுத்திய நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in