
திண்டுக்கல் அருகே தங்கை இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்த அக்காள் அதிர்ச்சி மரணமடைந்தார். இந்தச் சம்பவம் குடும்பத்தினரை மட்டுமன்றி அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி. இவரது மனைவி அன்னமுத்து (65). கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அன்னமுத்து நேற்று இறந்து போனார்.
அன்னமுத்துவின் மரண செய்தி சித்தையன்கோட்டையில் வசிக்கும் அவரது அக்காள் அந்தோணியம்மாள் (70) என்பவருக்கும் தெரிவிக்கப்பட்டது. தங்கையை இழந்த சோகத்தில் ஆழ்ந்த அந்தோணியம்மாள் ஆத்தூர் வந்தார். அங்கு தங்கையின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அப்போது அந்தோணியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அந்தோணியம்மாளை சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு கொண்டு சென்றனர். வழியில் அந்தோணியம்மாள் இறந்ததை, மருத்துவர் பின்னர் உறுதி செய்தார். தங்கை இறப்புக்கு வந்த இடத்தில் அக்காள் அந்தோணியம்மாள் இறந்த சம்பவம் அவர்களது உறவினர்களை மேலும் சோகம் அடையச்செய்தது.
தங்கையும், அக்காளும் அடுத்தடுத்து இறந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அன்னமுத்துவுக்கு ஒரு மகனும் அந்தோணியம்மாளுக்கு ஒரு மகளும் உள்ளனர்.