அதிர்ச்சி... நெய்வேலி பகுதிகளில் விஷமாக மாறிய தண்ணீர்... 250 மடங்கு பாதரசம் அதிகரிப்பு! பலருக்கும் சிறுநீரக பாதிப்பு!

ஆய்வறிக்கை வெளியிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
ஆய்வறிக்கை வெளியிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
Updated on
2 min read

நெய்வேலியில் செயல்படும் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் உள்ள தண்ணீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் பகுதிகளில், 121 வீடுகள் மற்றும் 37 இடங்களில் பூவுலகின் அமைப்பின் சார்பில் மண் மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் 'மின்சாரத்தின் இருண்ட முகம்' என்ற பெயரில் ஆய்வறிக்கையாக அந்த அமைப்பு நேற்று வெளிடப்பட்டது.

வடக்குவெள்ளூர், தொல்காப்பியர் நகரில், குடிப்பதற்காகவும் வீட்டுத்தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்திருப்பதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, வெள்ளாளன்குளம் பகுதியில் 30 மடங்கு துத்தநாகமும், 29 மடங்கு செம்பு, 28 மடங்கு நிக்கல் தண்ணீரில் இருப்பது தெரிய வந்துள்ளது. 

மேலும், இங்குள்ள தண்ணீரில், ஃப்ளோரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான் போன்றவற்றின் விகிதமும் அதிகரித்திருப்பதால் குடிக்க உகந்தது இல்லை என்பதும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி.யைச் சுற்றி ஆய்வு செய்யப்பட்ட 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாகவும்,  11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவிலும் மாசடைந்திருந்தது. 101 வீடுகளில் நடத்தப்பட்ட நேர்காணல் முறையிலான இந்த ஆய்வில் 89 வீடுகளில் உள்ளவர்களில் யாரோ ஒருவருக்கு சிறுநீரகம், தோல் அல்லது மூச்சுத் திணறல் சார்ந்த நோய் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல பரங்கிப்பேட்டையில் ஐ.டி.பி.சி.எல் நடத்தி வரும் அனல்மின் நிலையத்திற்கு அருகில் இரண்டு கிராமங்களில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நீர், மண் மாதிரிகளில் 3 இடங்கள் தீவிரமான மாசடைந்திருந்தன. 2 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாசடைந்திருந்தன.

இதனால் அப்பகுதிகளில் வசிப்போருக்கு நரம்பு மண்டல பாதிப்பு, செரிமான பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், விவசாய நிலம், குடிநீர் ஆதாரங்களில் அனல் மின் நிலைய கழிவுகள் சேர்ந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்த பகுதிகள் மக்கள் இனம் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாக மாறியிருக்கிறது. எனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், மத்திய மாநில அரசுகளும் இதில் தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in