
ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் 37 பயணிகளின் பை உள்ளிட்ட உடமைகள் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் விசாகப்பட்டினத்திற்கு நேற்று இயக்கப்பட்டது. இதில் பயணம் செய்த 37 பயணிகளின் உடமைகள் ஹைதராபாத்திலேயே விட்டுச் செல்லப்பட்டது விசாகப்பட்டினத்தில் இறங்கிய பிறகே தெரிய வந்துள்ளது. தங்களது உடமைகள் காணாமல் போனதால் பயணிகள் பரபரப்பாகினர். அவர்கள் உடமைகள் பத்திரமாக ஹைதராபாத்தில் இருப்பதாக இண்டிகோ விமானம் தெரிவித்தது.
அத்துடன், 37 பயணிகளின் உடமைகளும் விசாகப்பட்டினத்தில் உள்ள பயணிகளின் முகவரிகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹைதாராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற 6 இ 409 இண்டிகோ விமானத்தில் கவனக்குறைவாக 37 பைகள் விட்டுச் சென்றதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அனைத்து பைகளும் விசாகப்பட்டினத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் முகவரிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளது.