தூய ஆற்றலை நோக்கித் தொடங்கட்டும் பயணம்!

தூய ஆற்றலை நோக்கித் தொடங்கட்டும் பயணம்!

வேலையைச் செய்வதற்கான திறனே ஆற்றல் என அழைக்கப்படுகிறது. மனிதன் இயற்கையைப் பற்றி புரிந்துகொள்ளத் தொடங்கிய காலகட்டத்திலேயே, ஆற்றலைப் பற்றியும் புரிந்துகொண்டான். சிக்கிமுக்கிக் கல் என்பது இதன் தொடக்கமே. ஆற்றலைப் பற்றிய குறிப்புகள் அரிஸ்டாட்டிலின் நூல்களில் காணப்படுகின்றன. அதன் பிறகு உருவான விஞ்ஞானிகள் பலரும் ஆற்றல் குறித்து ஆராய்ந்ததுடன், அது குறித்த விளக்கத்தையும் அளித்தனர். இதன் தொடர்ச்சியில்தான் புகழ்பெற்ற ஆற்றலின் அழிவின்மை விதி உருவானது. அதாவது நாம் ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இந்தக் கோட்பாடு ஆற்றல் பற்றிய அதுவரையிலான நம்பிக்கைகளைத் தகர்த்தது. மேலும் புதிய வகை ஆற்றல்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்கும் முன்மாதிரியாக விளங்கியது. நியூட்டனின் விதிகள் ஆற்றல் பற்றிய கண்டுபிடிப்புகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தின.

இடைக்கால ஐரோப்பிய உலகானது அறிவியலில் அற்புதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது. கலிலியோவும், கோபர்நிகஸும், நியூட்டனும், தெகார்த்தேயும், இம்மானுவேல் காண்டும் அறிவியல், கணிதத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினர். இதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் தொழிற்சாலைகளுக்கான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தொழிற்புரட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் வளங்களுக்கான அதிகத் தேவை ஏற்பட்டது. அப்போது புதுப்பிக்கத்தக்க மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தகாத மரபு சார் ஆற்றல் என்ற பிரிவினை இருந்ததில்லை.

தொழிற்புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தால் ஆற்றல் மூலங்களுக்கான தேவை ஏற்பட்டது. இதன் காரணமாக, ஐரோப்பிய சமூகம் இது சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான தேவையை உணர்ந்ததோடு, அதற்கான ஆய்விலும் இறங்கியது. தொடர்ச்சியாக, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரானில் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலியமானது உலகில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் கண்டுபிடிப்பும், பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியும் அதுவரையிலான உலகை அப்படியே புரட்டிப்போட்டன.

அதன் பிறகான விமானக் கண்டுபிடிப்பு உலகின் கண்டங்களை இணைத்தது. இதன் தொடர்ச்சியில் 2-ம் உலகப்போரில் பெட்ரோல் மிக முக்கியப் பங்கு வகித்ததாக, வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘ஒரு துளி பெட்ரோல் எங்களுக்கு ஒரு துளி ரத்தத்துக்குச் சமம்’ என்றார் பிரான்ஸ் பிரதமர் அன்றைய கட்டத்தில்.

ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மரபுசார் ஆற்றல் வளங்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை உலகம் வெகு தாமதமாகவே அறிந்துகொண்டது. இதன் காரணமாக, மாற்று எரிசக்திக்கான தேவையை சமூகம் உணர்ந்தது. அதன் காரணமாக மரபுசாரா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை உருவானது.

ஆரம்பகாலங்களிலேயே மனிதர்கள் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் திறனைப் பெற்றிருந்தனர். சூரிய ஒளியிலிருந்து தீயை ஏற்படுத்தி, தீபங்களை உருவாக்குவது, அடுப்பை பற்றவைப்பது போன்ற செயல்களைச் செய்தனர். சூரிய கடிகார முறையும் அப்போது வழக்கத்தில் இருந்தது. சீனர்கள் எரியும் கண்ணாடிகளை சூரிய ஒளியைக் கொண்டு உருவாக்கினர். ரோமர்களும், கிரேக்கர்களும்கூட அவ்வாறு செய்தனர். இந்நிலையில், 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எட்மண்ட் பர்க்கல் என்பவர் ,போட்டோ வேலட்டிக் விளைவை உருவாக்கினார். அதாவது, இரு மின் தகடுகளுக்கிடையே சூரிய ஒளியைச் செலுத்தும்போது அது மின்னாற்றலாக மாறுகிறது. இவரின் கண்டுபிடிப்பு சூரிய ஆற்றல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் ஃபிரிட்ஸ் (Charles Fritts), செலினியத்தால் ஆன சூரியத் தகடுகளை உருவாக்கினார். இதன் காரணமாக சூரிய ஆற்றலின் தந்தை என இவரை சிலர் குறிப்பிடுகின்றனர்.

சூரிய ஒளி ஆற்றலின் பெரும் புரட்சி காலகட்டம் என 1954-ம் ஆண்டைக் குறிப்பிடலாம். காரணம், அப்போதுதான் தற்போதைய தொழில்நுட்பமான சிலிகான் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளி கட்டிடம் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் சூரிய ஒளி விளக்குகள், சுடுநீர் கலம் போன்றவை உருவாக்கப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரை, சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மரபு சார் ஆற்றலே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதற்காக இந்தியாவில் பல அனல் மின்நிலையங்கள், நீர்தேக்கங்கள், அணுமின் நிலையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியில் 1970-களில் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் எழுச்சியானது, உலக நாடுகளைச் சுற்றுச்சூழல் சார்ந்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியது. ஐக்கிய நாடுகள் சபையானது இதற்காகத் தனி அமைப்பை உருவாக்கியது. மேலும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தங்கள் நாடுகளில் சுற்றுச்சூழலுக்கான தனி அமைப்பை ஏற்படுத்தின. இந்தியாவும் 1970-களில் இதற்கான தனிச்சட்டத்தை இயற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது. இதன் மூலம் இந்தியாவின் இயற்கை வளங்கள் மற்றும் வனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தொழிற்சாலை மற்றும் பிற இடங்களில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தன.

மரபுசாரா புதுப்பிக்கத்தக்க தூய ஆற்றலைப் பொறுத்தவரை, இந்தியா ஒப்பீட்டளவில் மிகத் தாமதமாகத்தான் அதற்கான முயற்சியில் இறங்கியது. காரணம் இந்தியாவின் மக்கள்தொகைக்கும், மரபு சாரா ஆற்றலுக்கும் பாரதூர இடைவெளி இருப்பதே. இதன் தொடர்ச்சியில் 2010-ல் ஜவாஹர்லால் நேரு தேசிய சூரிய மின் ஆற்றல் திட்டம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இது தேசிய பருவநிலை மாற்றத்துக்கான செயல்திட்டம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர், சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புக்கான முன்னெடுப்பு தொடங்கியது. இதற்காக மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் சூரிய ஒளி மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் நாட்களாக உள்ளன. இதன் அடிப்படையில் மத்திய அரசு, 22 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்தது. இதன் தொடர்ச்சியில் 2014 காலகட்டத்தில் மின்வழித்தடம் சார்ந்த சூரிய மின் உற்பத்தி 2.2 ஜிகாவாட்டாக இருந்தது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சதுர மீட்டருக்கு நாம் சுமார் 2 கிலோவாட் சூரிய மின் சக்தியை நாம் பெற முடியும்.

புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியானது கடந்த பத்தாண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. இது 2014 காலகட்டத்தில் 30,000 மெகாவாட்டாக ஏற்றம் கண்டது. இதில் காற்றாலை மின் உற்பத்திதான் அதிகம் பங்கு வகிக்கிறது. இப்போதைய நிலையில் மொத்த மின் உற்பத்தியில் மாற்று எரிசக்தியானது 12 சதவீதப் பங்கு வகிக்கிறது. இது அணு மின் உற்பத்தியைவிட அதிகம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பொறுத்தவரை இந்தியாவில் பல வகைகளில் இது ஜனநாயகபூர்வமான ஆற்றல் உற்பத்திக்கும் அதன் நுகர்வுக்கும் வழிவகுத்திருக்கிறது. மாற்று எரிசக்தியானது முக்கியமான இடத்தை அடையும் முன்பு மரபுசார் நிலக்கரி மற்றும் இதர புதைபடிவ எரிபொருட்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தின. தற்போதைய காலகட்டத்தில், மரபுசாரா மாற்று எரிசக்தி பிரபலம் அடைவதன் பலனாக மரபுசார் சக்தியானது 2-ம் இடம்பெறுகிறது.

தற்போதைய உலகில் மாற்று எரிசக்திக்கான தேவையைப் புவி வெப்பமடைதல் செயல்பாடு உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாடும் அதற்கான திட்டங்களை வகுத்திருக்கின்றன. மேலும் நிலக்கரி சார் மின் உற்பத்தி, பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்துக்குக் காரணமாக இருப்பதால், பெரும்பாலான அரசுகள் மாற்று எரிசக்தியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டன. இந்தியாவில் உள்ள எல்லா தொழிற்சாலைகளும் படிப்படியாகப் புதுப்பிக்கத்தக்க எரி சக்திக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. இதன்படி அனைத்து தொழிற்சாலைகளும் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் மாற்று எரிசக்தி முறைக்கு மாறியாக வேண்டும்.

சமீபத்தில் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இந்தியா, 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை அறவே குறைப்பதாக உறுதிமொழி அளித்திருக்கிறது. நிலக்கரிப் பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைப்பதாக உறுதி பூண்டிருக்கிறது. இதன் இலக்கை அடைய நாம் ஆற்றலை எந்த இடத்திலும் வீணடிக்காமல், அதை அளவோடு உபயோகிக்க வேண்டும். மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து, அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும்.

டிச.14: தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்

எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், ‘கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். தொடர்புக்கு: peerzeena@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in