வெளிவர்த்தகத்துக்கு இனி இந்திய ரூபாய்: மத்திய அரசின் முடிவால் லாபம் என்ன?

வெளிவர்த்தகத்துக்கு இனி இந்திய ரூபாய்: மத்திய அரசின் முடிவால் லாபம் என்ன?

சர்வதேச வியாபாரத்தில் அமெரிக்க டாலர்தான் பொதுவான செலாவணியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச வர்த்தகத்தில் நேரடியாக இந்திய ரூபாயிலேயே கணக்குகளை முடித்துக்கொள்வது என்று மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. இதன் பின்னணி என்ன? எதிர்பார்த்த பலன் கிட்டுமா? பார்க்கலாம்.

சரியும் ரூபாய் மதிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, பொருளாதாரத் தடை நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா உள்ளிட்ட தொழில்வள நாடுகளும் ரஷ்யாவைப் புறக்கணிக்கின்றன. அந்நாட்டு வங்கிகளுடனும் நிதி நிறுவனங்களுடனும் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்திவிட்டன. இந்த நிலையில் ரஷ்யாவும் தனக்கு வேண்டியவற்றை வாங்கவும், தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு நல்ல விலை பெறவும் முடியாமல் தடுமாறுகிறது. இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவுடன் இப்போதும் வர்த்தக உறவைத் தொடர்கின்றன. உலக அளவிலான நிதி நிலை காரணமாகவும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டிருப்பதாலும் பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை அதிகரிப்பதாலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. அதனால் ஒரு டாலருக்கு கிட்டத்தட்ட 80 ரூபாயைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இறக்குமதிக்காகும் செலவுகளை ஈடுகட்டவும் இந்திய நிதிச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலைத் திரும்ப எடுப்பதால் அதற்கு ஈடாக கைவசம் உள்ள அமெரிக்க டாலர்களைத் தர வேண்டியிருப்பதாலும்கூட இந்தியாவின் கையிருப்பிலிருந்து டாலர்கள் வேகமாகக் கரைகின்றன. இதுவே ரூபாயின் மதிப்பைத் தொடர்ந்து சரியச் செய்கிறது.

இதிலிருந்து மீள்வதற்காக, எந்தெந்த நாடுகள் இந்திய ரூபாயை வாங்கிக்கொள்ள அல்லது இந்திய ரூபாயில் வணிகம் செய்யத் தயாராக இருக்கின்றனவோ அவற்றுடன் ரூபாய் மூலமே பரிவர்த்தனையைச் செய்துகொள்ள இந்தியா முடிவு செய்திருக்கிறது.

சம்மதித்த நாடுகள்

இதில் முதலிடம் வகிப்பது ரஷ்யா. அந்த நாடு, தான் உற்பத்தி செய்யும் கச்சா பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது குறைவுதான் என்றாலும் அதற்குத் தேவைப்படும் உணவு தானியங்கள், மருந்து – மாத்திரைகள், இதர அவசியப் பொருட்களை அந்த மதிப்புக்கு ரூபாய் கணக்கிலேயே வாங்கிக்கொள்ள இந்த முடிவு உதவும். இதனால் ரஷ்ய இறக்குமதிக்கு இந்தியா டாலர்களைக் கொடுக்க வேண்டாம், கைவசம் உள்ள இந்திய ரொக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ரஷ்யா போலவே வேறு சில நாடுகளும் ரூபாயைப் பெறச் சம்மதிக்கின்றன. காரணம் இந்தியாவிடமிருந்துதான் சில பொருட்களை அவற்றால் விலை குறைவாக வாங்க முடியும். இதனால் ரூபாயின் செலாவணி மதிப்பு உடனடியாக உயர்ந்துவிடாது என்றாலும் கைவசம் உள்ள டாலர்களைக் கரைக்கும் தேவை குறையும்.

சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலர் முக்கியச் செலாவணியாக இருந்தாலும் வேறு சில நாடுகளின் செலாவணிகளும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் யூரோ, பிரிட்டனின் பவுன் (பவுண்ட்), இத்தாலியின் லிரா, பிரான்சின் பிராங்க், ஜெர்மனியின் மார்க், ஜப்பானின் யென், சீனத்தின் யுவான், வளைகுடா நாடுகளின் செலாவணிகள் போன்றவை பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. எனவே ரூபாயையும் அப்படிப் பயன்படுத்தத் தடையில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்டவை, ரூபாய் வழியிலான பரிமாற்றத்தை எளிதாகச் செய்ய முடியும்.

பலன் என்ன?

சர்வதேச வணிகத்தில், இப்படி இந்திய ரூபாயைப் பரிமாறிக்கொள்வதால் இந்தியாவின் கடன் பத்திரச் சந்தை வலுப்படும். வெளிநாடுகளுக்குத் தர வேண்டிய காலம் வரை, கையிருப்பில் உபரியாக இருக்கும் ரூபாயைக் குறுகிய காலத்துக்கு உள்ளூர் மூலதனச் சந்தையில் முதலீடு செய்து சிறிது லாபமும் பார்க்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்புதான் அதிகம். இதனால் நடப்புக் கணக்கு பற்றுவரவில் இந்தியாவுக்கு இழப்புதான் அதிகம். ஆனால் அதற்காக டாலர்களை மட்டுமே நாடுவதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிந்து இந்த பற்றாக்குறையின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும். ரூபாயிலேயே வரவு – செலவு பற்றுவரவு வைக்கப்படும்போது இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோல் – எரிவாயு மதிப்பைவிட தான் வாங்கும் உணவு தானியங்கள், மருந்து – மாத்திரைகளுக்கு ரஷ்யா அதிகம் தர வேண்டியிருந்தால், அந்தக் கூடுதல் தொகைக்கு மட்டும் அது ரூபிளையோ வேறு செலாவணியையோ பயன்படுத்தினால் போதும். அல்லது ரஷ்ய நிறுவனங்கள் தாங்கள் செய்த ஏற்றுமதிக்கு இணை மதிப்பில் தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்துகொண்டால் போதும். ரூபாய் கணக்கில் இரண்டும் நேர் செய்யப்படும். செலாவணி பரிமாற்றத்துக்கான தேவைகூட குறைந்துவிடும். கிட்டத்தட்ட பண்டமாற்று போலவே ஆகிவிடும். இதனால் இரு நாடுகளுக்கும் செலாவணியைத் திரட்ட வேண்டிய நெருக்கடிகூட இருக்காது.

கைவசம் உள்ள ரூபாயை, கொடுக்க வேண்டிய காலம் வரையில் பங்கு பத்திரங்களிலும கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்து சிறிதளவு வருவாயைப் பெறுவதுடன் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டைத் திரும்பப் பெற்று விலகிச் சென்றாலும் இந்திய பங்குச் சந்தை, கடன் பத்திர சந்தை ஆகியவற்றில் முதலீடு சரியாமல் பார்த்துக்கொள்ள முடியும். இப்படி ரூபாயை மட்டுமே வெளிவர்த்தகத்துக்கு செலாவணியாகப் பயன்படுத்துவதால் மாதத்துக்கு 300 கோடி டாலர்கள் மிச்சப்படும். ஆண்டுக்கு 3,600 கோடி டாலர்கள் மீதமாகும். இது கணிசமான தொகையாகும். இந்திய ரூபாய் மதிப்பில் 2,40,000 கோடி ரூபாய் முதல் 2,80,000 கோடி ரூபாய் வரையில் இது இருக்கும் என்று மதிப்பிடுகின்றனர்.

ஏப்ரல் – மே மாதங்களில் 25 கோடி டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்த இந்தியா, 503 கோடி டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்திருக்கிறது. இதில் வர்த்தக உபரி ரஷ்யாவுக்குத்தான் என்றாலும் முடக்கப்பட்டிருக்கும் அதன் பொருளாதாரம் மூச்சுவிட இந்தியா உதவுகிறது என்பதால் இந்திய ரூபாய் கணக்கிலேயே பரிமாற்றங்களுக்கு ரஷ்யா விரைந்து ஒப்புக்கொண்டது.

இதே போல பல வளரும் நாடுகளுக்கும் டாலர் பற்றாக்குறை இருக்கிறது. அந்தந்த நாடுகளின் செலாவணிகள் வலுவாக இல்லாவிட்டால் டாலரில்தான் பரிமாற்றம் என்றால் அவையும் டாலர் கையிருப்புகளை வேகமாக இழக்க நேரும். எனவே மாற்று யோசனையாக ரூபாயை, ரூபாய் மதிப்பிலேயே பகிர்ந்துகொள்ளலாம் என்பதால் பல நாடுகளுக்கு டாலர் கையிருப்பு பற்றிய கவலை நீங்குகிறது.

தொடரும் எதிர்பார்ப்புகள்

ரஷ்யா மட்டுமல்ல இலங்கை, ஈரான் போன்ற நாடுகள்கூட இந்திய ரூபாயை ஏற்கத் தயாராக இருக்கின்றன. எல்லா நாடுகளுமே அமெரிக்க டாலரைத்தான் தங்களுடைய அந்நியச் செலாவணிக் கையிருப்பில் முன்னுரிமை தந்து வைத்துக்கொள்கின்றன என்றாலும் அதன் ஆதிக்கம் குறைந்து வருகிறது. இந்தியாவே 2016-ல் தன்னுடைய அந்நியச் செலாவணி கையிருப்புகளில் 65 சதவீத அளவுக்கு டாலர்களாக வைத்திருந்தது. அதையே 2022-ல், 60 சதவீதம் ஆகக் குறைத்துக்கொண்டது.

கடந்த ஜூன் மாதம் மட்டும் பெட்ரோலியம், நிலக்கரி, தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி அதிகமாக இருந்ததால் இந்தியாவின் வெளிவர்த்தகப் பற்று வரவில் பற்றாக்குறை 563 கோடி டாலர்களானது.

இந்தியாவுடன் ரூபாய் கணக்கில் ரஷ்யா வர்த்தகம் செய்யத் தொடங்கியதும், இந்தியா தர வேண்டிய தொகையை அப்படியே ரூபாயாக இந்திய பங்குச் சந்தையிலும் கடன் பத்திரச் சந்தையிலும் ரஷ்யா முதலீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இது இரண்டு வகையில் இந்தியாவுக்கு நல்லது. இந்திய ரூபாயும் கையிருப்பிலேயே இருக்கும். அதே சமயம் ரஷ்யாவின் செயலால் அந்நிய முதலீடும் ஒரேயடியாகச் சரிந்துவிடாமல் பராமரிக்கப்படும்.

ரஷ்யாவுடனான இந்திய நிகர வர்த்தகம், அதாவது ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமானதால் ஏற்பட்ட வர்த்தக நிகர மதிப்பு 2023 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 478 கோடி டாலர்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். அதுவே ஏப்ரல்-மே மாதங்குக்குப் பிறகு 504 கோடி டாலர்களாக உயர்ந்திருக்கிறது. 2022 முழு ஆண்டு முழுவதற்கும் ரஷ்யாவுடனான இந்திய வர்த்தக மதிப்பு 1,000 கோடி டாலர்கள்தான் என்பதுடன் ஒப்பிடும்போது இது நல்ல முன்னேற்றம்தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in