பன்னாட்டு கரன்சியாகும் இந்திய ரூபாய்: சர்வதேச சந்தையில் பலம் அதிகரிக்க வாய்ப்பு

பன்னாட்டு கரன்சியாகும் இந்திய ரூபாய்: சர்வதேச சந்தையில் பலம் அதிகரிக்க வாய்ப்பு

இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக இலங்கை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால், இலங்கையில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்கு நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தனது நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்லவும், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், இந்திய ரூபாயை இலங்கை அரசு கையில் எடுக்க உள்ளது. இலங்கை, இந்திய வணிகத்தில் இந்திய ரூபாயை பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்திக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.

மேற்கத்திய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஆளான ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக நடவடிக்கைகளில் இந்திய ரூபாய் புழக்கத்தில் உள்ளது. ரஷ்யாவில் 12, இலங்கையில் 6, மொரீஷியஸில் 1 என இந்திய ரூபாய் ஸ்பெஷல் வொஸ்ட்ரோ கணக்குகள் திறக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் மற்றும் இந்தியர்கள் பன்னாட்டு பண வர்த்தனைக்கு இனி டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன்மூலம் ரூ.8.26 லட்சம் வரை இந்திய பணத்தை இலங்கை மக்கள் வைத்து கொள்ள முடியும். இப்பணத்தை இலங்கை வங்கிகளில் கொடுத்து வேறு நாட்டு பணமாகவும் மாற்றி கொள்ளலாம். டாலர் பற்றாக்குறையால், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நாடுகளும் வர்த்தக பயன்பாட்டிற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த விருப்பம் தெரிவித்து வருகின்றன. தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பர்க், சூடான் உள்பட 7 நாடுகள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இந்தியாவில் வர்த்தக கூட்டாளி 3-வது பெரிய நாடான ஐக்கிய அமீரகத்துடனும் வர்த்தகத்திற்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் 1960களின் தொடக்கத்தில் இந்திய ரூபாயில் வர்த்தகம் வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கிழக்கு ஐரோப்பா நாடுகளில் புழக்கத்தில் இருந்துள்ளது. 1965க்கு பின் இம்முறை கைவிடப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு கரன்சியாக இந்திய ரூபாய்க்கு அங்கீகரிக்கப்படுமானால், இந்தியாவின் வணிக பற்றாக்குறை குறைவதுடன், சர்வதேச சந்தையில் இந்தியாவின் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in