நடுக்கடலில் தமிழக மீனவர் மீது குண்டு பாய்ந்தது: இந்திய கடற்படை வீரர்கள் திடீர் தாக்குதல்: நடந்தது என்ன?

நடுக்கடலில் தமிழக மீனவர் மீது குண்டு பாய்ந்தது: இந்திய கடற்படை வீரர்கள் திடீர் தாக்குதல்: நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்ட  கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால்  சுட்டதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த  மீனவர்கள் ஏராளமானோர் நேற்று காலை படகுகளில் வங்கக் கடலுக்குச் சென்று ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  நடுக்கடலில் நல்ல மழை பெய்து கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை  இந்திய கடற்படை வீரர்கள் நடுக்கடலில் ரோந்து  சென்று கொண்டிருந்தனர்.  அப்போது ஒரு  படகு குறித்த விவரம் மழையில் சரியாக தெரியாததால் படகை  நிறுத்தச்  சொல்லி விளக்குகள்  மூலம் சமிக்ஞை  கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் இதை  அறியாத மீனவர்கள் படகை தொடர்ந்து செலுத்திக் கொண்டிருந்தனர். படகு நிற்காமல் சென்றதால்  சந்தேகம் அடைந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  இதில் படகில் இருந்த மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரவேல் காலில் குண்டு காயம்பட்டு படுகாயம் அடைந்தார்.

அதனையடுத்து அந்த படகை நோக்கி விரைந்த இந்திய கடற்படை வீரர்கள் அது தமிழக விசைப்படகு என்பதை அறிந்து கொண்டு படகை சோதனை இட்டனர்.  அப்போது படகில்  இருந்த மீனவர் வீரவேலுக்கு  குண்டு  காயம் ஏற்பட்டிருப்பது  தெரியவந்தது. அதனையடுத்து அவரை மீட்டு தங்கள் கப்பலில் ஏற்றிக் கொண்ட கடற்படையினர் அவருக்கு தேவையான முதலுதவிகள் செய்த பின்னர்  ராமநாதபுரம் கொண்டுசென்று  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்துள்ளனர்.

தமிழக விசைப்படையில் இருந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரே  துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in