``இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் திரிகோணமலை துறைமுகத்தை கைப்பற்ற முயற்சிக்கும் சீனாவின் முயற்சியை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்'' என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்ட அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இலங்கையின் வடகிழக்கு பகுதி திரிகோணமலை அருகே அறியாளை பகுதியில் கடலில் கடல் அட்டை பண்ணை தொடங்க சீன கம்பெனி ஒப்பந்தமாகியுள்ளது. கடலில் 600 ஏக்கரில் கடல் அட்டை வளர்ப்பதாக கூறும் சீனா, வங்காள விரிகுடா கடற்பகுதியில் மறைமுகமாக தன் கால் தடத்தை பதிக்க முயற்சி செய்கிறது. திரிகோணமலை கடற்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். புவியில் ரீதியாக இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தின் முக்கிய பாதுகாப்பு மையமான திரிகோணமலை துறைமுகத்தை சீனா கைப்பற்ற எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய அரசுக்கு விக்னேஸ்வரன் கோரிக்கை விடுக்கிறார்.
இலங்கையின் அம்பன்தோட்டா, கொழும்பு துறைமுகங்கள் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற நிலையில், சீன அரசின் உளவு கப்பல், போர்க்கப்பல்கள் வந்து சென்று இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், திரிகோணமலை துறைமுகத்தை கைப்பற்ற சீன அரசு தற்போது திட்டமிட்டு வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். கடல் அட்டை வளர்ப்பு என்ற போர்வையில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் அச்சுறுத்தல், இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடல் பகுதியில் முக்கிய துறைமுகமான திரிகோணமலை கடற்படை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கில் சீனா எடுத்து வரும் முயற்சியை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.