
நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட மகிழ்ச்சியை நாடே கொண்டாடி வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்யும் 'ஆதித்யா எல்1' விண்கலம் எப்போது அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
நேற்று நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அடுத்ததாக சூரியன் மற்றும் வெள்ளிக்கான எதிர்கால பயணத் திட்டங்கள் பற்றி நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "மிஷன் சன் எனப்படும் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த விண்கலம் ஏவப்படும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் இதற்கான பணியை முழுவதுமாக செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதைத் தொடர்ந்து பல சோதனைப் பயணங்கள் மற்றும் 2025ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் வரை உள்ளது" என்றார்.