சுதந்திர நாள் தின விழாவின் போது வாரிசு சான்றிதழுக்காக இளம் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இதனை கோலாகலமாக்கக் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அனைவரும் தங்களது வீட்டில் மூன்று நாட்கள் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இன்று மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கனா கல்லூரி மைதானத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண் தனது கைக் குழந்தையுடன் பங்கேற்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அருகே நின்றிருந்த ஷாலினி, கணவரை இழந்து தனியாக வசித்து வருவதாகவும் வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விழாவில் அனைவரின் முன்பாகவும் கதறி அழுதார்.
இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், அந்த பெண்ணிடம் வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.