கர்நாடகாவில் இறந்து போனவர் திடீரென உயிரோடு எழுந்தவர் சிறிது நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டம், சன்னப்பட்டினம் தாலுகாவில் உள்ள ஹுச்சையன்தொட்டியைச் சேர்ந்தவர் சிவராமு(55). கூலித் தொழிலாளியான சிவராமு நேற்று திடீரென காலை மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், உடனடியாக சிவராமுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவராமு மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து சிவராமு உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். நேற்று மாலை சிவராமு உடலை தகனம் செய்ய எடுத்துச் சென்றனர். அப்போது திடீரென பாடையில் இருந்து சிவராமு எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
சிவராமு உயிர் பிழைத்த விஷயத்தை உடனடியாக மருத்துவர்களிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சிவராமை சோதனை செய்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் சிவராமுவை அருகில் உள்ள ஜெயதேவா மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே சிவராமு உயிர் பிரிந்தது.
இதனால் அவரது உறவினர்கள், சிவராமுவின் உடலை மீண்டும் ஹுச்சய்யனதொட்டிக்கு கொண்டு வந்தனர். அவர் மீண்டும் உயிருடன் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது வீட்டில் நீண்ட நேரம் சிவராமுவின் உடலை வைத்திருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.