சென்னையில் ரோட்டில் சென்ற பொதுமக்களை வெட்டிய ரவுடிகள்: பிடிக்க வந்த போலீஸார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

சென்னையில் ரோட்டில் சென்ற பொதுமக்களை வெட்டிய ரவுடிகள்: பிடிக்க வந்த போலீஸார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

சென்னையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் ரோட்டில் சென்ற பொதுமக்களை வெட்டியதுடன் பிடிக்க வந்த போலீஸார் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று இரவு 25-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று போதையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டது. அத்துடன், சாலையில் நிறுத்தி வைத்திருந்த இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது.

இதைக் கண்ட பெண்கள்,மற்றும் சிறார்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பல் ஆபிரகாம் தெருவைச் சேர்ந்த நவீன்(28) என்பவரை சராமாரியாக தலை, முதுகு, இடுப்பு பகுதியில் வெட்டியதுடன், அங்கிருந்த சாமியாரின் சமாதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டை வீசியது.

இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.. பதறிப்போன பொதுமக்கள் உடனே போலீஸாருக்குத் தகவல் அளித்ததனர். இதன் பேரில் ரோந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. அவர்களைப் பார்த்த அந்த போதைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அவர்களைப் பிடிக்க முன்ற போலீஸார் மீதும் அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றது. இதில் போலீஸார், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

அங்கு வந்த மடிபாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் கலவரம் நடந்த பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவருமான நாகூர் மீரான் (32) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ராபின்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் என 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நாகூர் மீரானின் கூட்டாளி வீரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராபின்சனின் தங்கை ஜெரினா மற்றும் அவரது காதலன் அனில் ஆகியோரை கடத்திச் சென்று அடித்து உதைத்து மிரட்டியது. பின்னர் இருவரையும் வேளச்சேரியில் இறங்கிவிட்டு சென்றது தெரியவந்தது.

அங்கிருந்து தப்பி வந்த ஜெரினா, அனில் ஆகியோர் நாகூர் மீரான் கூட்டாளிகள் தங்களைக் கடத்தி விட்டதாக ராபின்சனின் கூட்டாளி சஞ்சயிடம் கூறினர். இதனால் ,சஞ்சய் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களோடு ஆபிரகாம் தெருவுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த பொதுமக்கள் சிலரை வெட்டியது தெரியவந்தது.

இந்த வன்முறையில் சம்பவத்தில் அபுபக்கர் , சஜின், நவீன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 ஆட்டோக்கள், 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சஞ்சய், அனில் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 19 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும் அம்பேத்கர் நகர் மற்றும் ஆபிரஹாம் தெரு பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in