பறக்கும் படைக்கு முக்கிய உத்தரவு: இன்று தொடங்குகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறதுபறக்கும் படைக்கு முக்கிய உத்தரவு: இன்று தொடங்குகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.5 -ம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.

அதுபோக தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 338 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் தேர்வுப் பணியில் ஈடுபடும் பறக்கும் படை ஆசிரியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பறக்கும் படையில் பணி அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்களை அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்தக் கூடாது. அவர்கள் தங்களின் செல்போன்களை ஆஃப் செய்து, தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் சோதித்தல் அவசியம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கி படிக்க அறிவுறுத்தவும், காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்ய கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் துவக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் 3,224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7 ஆயிரத்து 577 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 376 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளில் 3 ஆயிரத்து 228 மாணவர்களும், 2 ஆயிரத்து 607 மாணவிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 835 பேர் இன்று தேர்வு எழுத உள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in