`பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன்'- ரவுடி மகனை பிடிக்கச் சென்ற போலீஸாரை பதறவைத்த பெண் தாதா

ரவுடி வினோத்
ரவுடி வினோத்

ரவுடியை பிடிக்க சென்ற போலீஸார் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார் பெண் தாதா. தப்பி ஓடிய ரடிவு மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பகுதியை சேர்ந்த ரவுடி வினோத் என்ற ஆர்ச்வினோத்(30). ஏ கேட்டகிரி ரவுடியான வினோத் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமன்றி வினோத்தின் தாயாரும் பெண் தாதாவுமான லதா(55) மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நேற்று இரவு அமைந்தக்கரை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் 3 காவலர்கள் ரவுடி வினோத் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது ரவுடி வினோத் போலீஸாரை தள்ளிவிட்டு வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொண்டார். உடனே போலீஸார் வீட்டிற்குள் சென்று அவனை பிடிக்க முயன்றபோது ரவுடி வினோத்தின் தாய் லதா, 4 காவலர்கள் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி கொண்டதுடன், உங்களை இங்கேயே கொளுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பதறிப்போன போலீஸார், உடனே அருகில் இருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மீதும் லதா மீதும் ஊற்றினர். பின்னர் போலீஸார் லதாவை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவிட்டு அவரிடம் எழுதி வாங்கி கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரவுடி வினோத்தை போலீஸார் தேடிவருகின்றனர். பெண் தாதா லதா போலீஸார் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விடுவேன் மிரட்டல் விடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in