என் பல்லை ஏஎஸ்பி பிடுங்கல, கீழே விழுந்து தான் உடைஞ்சது: விசாரணை அதிகாரி முன் புகார்தாரர் அந்தர் பல்டி

ஏஎஸ்பி பல்வீர்சிங். பற்கள் உடைபட்ட கைதிகள்
ஏஎஸ்பி பல்வீர்சிங். பற்கள் உடைபட்ட கைதிகள் என் பல்லை ஏஎஸ்பி பிடுங்கல, கீழே விழுந்து தான் உடைஞ்சது: விசாரணை அதிகாரி முன் புகார்தாரர் அந்தர் பல்டி

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பியை முதல்வர் ஸ்டாலின் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தன் பற்களை ஏஎஸ்பி பிடுங்கவில்லை, கீழே விழுந்து தான் பல் உடைந்தது என விசாரணைக் கமிஷன் முன்பு புகார்தாரரான சூர்யா சொல்லி உள்ளார். இதனால் இவ்விவகாரம் திடீர் திருப்பத்தை எட்டியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் பல்பீர் சிங். இவர் அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறு வழக்குகளில் சிக்குவோரை காவல் நிலையத்துக்கு அழைத்து, கட்டிங் பிளேயரால் பற்களைப் பிடுங்குவதாக புகார் எழுந்தது.

இவரது ஆளுகையின் கீழ் வரும், பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் காவல் நிலையப்பகுதிகளில் கடந்த சில வாரங்களில் இப்படி பல இளைஞர்களுக்கும் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அண்மையில் ஜமீன் சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர், தனக்கும் இதே போன்று ஏஎஸ்பி பல்பீர் சிங்கால் பல் பிடுங்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வேறு மூன்று இளைஞர்கள் தங்கள் மீதான விசாரணையின்போது ஏஎஸ்பியால் பற்கள் பிடுங்கப்பட்டதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் புகார்கள் சென்றன.

இதுகுறித்து விசாரித்து அறிக்கைத் தர சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலமுக்கு, நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதில் பாதிக்கப்பட்ட இளைஞர்களான லெட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ், சூர்யா ஆகியோர், தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுடன் உதவி ஆட்சியர் முன்பு நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதனிடையே மனித உரிமைகள் ஆணையமும் இப்பிரச்சினையை தானாகவே முன்வந்து கையில் எடுத்தது. இந்நிலையில், பல்வீந்தர் சிங் சம்பவம் நடந்த உடனேயே காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, இன்று அவர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டு உள்ளார். இதை இன்று சட்டசபையிலேயே முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் விசாரணை ஆணையரான சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சபீர் ஆலம் முன்னிலையில் இன்று ஆஜரான பாதிக்கப்பட்ட புகார்தாரர்களில் ஒருவரான சூர்யா, “என் பல் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் கீழே விழுந்ததில் தான் என் பல் உடைந்தது ”என விளக்கம் அளித்துள்ளார். இதனால் இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருந்தும், இவர் போலீஸாருக்குப் பயந்து இப்படிச் சொல்கின்றாரா அல்லது உண்மையில் இதுதான் நடந்ததா என நெல்லைவாசிகள் குழம்பிப் போய் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in