கடந்த ஒரு மாதத்திற்கு முன் காதல் திருமணம் செய்த மனைவியை எலக்ட்ரிக் கட்டரால் 50 துண்டுகளாக்கி வீதியில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தில்தார் அன்சாரி(28). இவர் ரூபிகா பகதின்(22) என்ற பழங்குடி பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். அத்துடன் திருமணம் செய்யாமல் இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் ரூபிகாவை தில்தார் திருமணம் செய்து கொண்டார். தில்தாருக்கு ரூபிகா இரண்டாவது மனைவி ஆவார்.
இந்த நிலையில் தனது மனைவி ரூபிகா காணாமல் போனதாக போரியா காவல் நிலையத்தில் தில்தார் அன்சாரி புகார் செய்தார். இதே போல ரூபிகாவின் பெற்றோரும் தங்கள் மகளைக் காணவில்லை என புகார் செய்திருந்தனர்.
இந்த நிலையில், போரியோ சந்தாலி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் இருந்து ஒரு பெண்ணின் உடல் பாகத்தை நாய் கல்விச் செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போரியா காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அதிர்ந்து போயினர். 18 பிளாஸ்டிக் பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் இருந்தன. அந்த உடல் பாகங்கள் ரூபிகாவுடையது என்று தெரிந்தது.
இதையடுத்து அவரது கணவர் தில்தார் அன்சாரியை போலீஸார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது மனைவியைக் கொலை செய்து எலக்ட்ரிக் கட்டரால் 50 துண்டுகளாக்கி வீசியதாக கூறினார். எலக்ட்ரிக் கட்டரை மீட்ட போலீஸார்,மீதமுள்ள உடல் பாகங்களைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து டிஐஜி மண்டல் கூறுகையில்," எதற்காக மனைவியை தில்தார் கொலை செய்தார் என்பது விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையை மறைப்பதற்காக உடலை இத்தனை துண்டுகளாக்கி வீசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். இந்த சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.