மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மனைவியை கணவன் தூக்கி வீசிய சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ளது வசைரோடு ரயில் நிலையம். இந்த ரயில்நிலையத்தில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு ஒருவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள 5-வது பிளாட்பாரத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் தரதரவென தண்டவாளத்தை நோக்கி இழுத்துச் சென்றுள்ளார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மனைவியை தூக்கி வீசியுள்ளார். இதில் உடல் சிதறி மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் அந்த நபர் தூக்கிக் கொண்டு ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. பிள்ளைகள் கண்முன்னே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சியை வைத்து அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மனைவியை கொலை செய்த நபர் தாடர் மற்றும் கல்யாண் ரயில் நிலையங்களில் நடந்து சென்றது தெரியவந்துள்ளது. கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்றும் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அந்த நபர் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.