
ஆண் நண்பரிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு கணவர் கண்டித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் மூவேந்தர்நகர் 7-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி(30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனநிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் புவனேஷ்வரிக்கு அண்ணாநகர் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும் புவனேஷ்வரி வீட்டில் அடிக்கடி செல்போனில் தனது ஆண் நண்பருடன் பேசி வருவதை பார்த்து ஆத்திரமடைந்த கணவர் சுரேஷ், ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு பலமுறை கண்டித்துள்ளார்.
இதனை பொருட்படுத்தாத புவனேஷ்வரி நேற்றிரவு வழக்கம் தனது ஆண் நண்பரிடம் பேசி கொண்டிருந்ததை பார்த்த கணவர் சுரேஷ் அவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தபோது வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். புவனேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து படுகாயமடைந்த புவனேஷ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 50 சதவீத தீக்காயமடைந்த புவனேஷ்வரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.