
பிறந்த நாள் விழாவில் பிரியாணி சாப்பிட்டு வீடு திரும்பும் வழியில் மனைவி மூச்சு திணறல் ஏற்பட்டு பலியான நிலையில், துக்கம் தாங்காமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் தம்புசாமி(55). பிளம்பிங் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆனநிலையில் பவானி(49) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு 21 வயதில் ஒரு மகள் உள்ளார். வீட்டு வேலை செய்து வந்த பவானி நேற்று இரவு அயனாவரம் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள தனது அக்கா பார்வதியுடன் சென்றுள்ளார். பின்னர் அங்கு பிரியாணி சாப்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென பவானிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே பவானியை அவரது அக்கா பார்வதி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பவானி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கா பார்வதி இது குறித்து பவானியின் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த அயனாவரம் போலீஸார் பவானி உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனைவி இறந்த தகவல் கேட்டு மருத்துவமனைக்கு சென்ற கணவர் தம்புசாமி மனைவி உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தம்புசாமி மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மகள், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுந்தார். இது குறித்து அயனாவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார் தம்புசாமி உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.