மனைவி பிரிந்த சோகம்: குளத்தில் குதித்து மெக்கானிக் தற்கொலை

மனைவி பிரிந்த சோகம்: குளத்தில் குதித்து மெக்கானிக் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற துயரில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. முன்னீர்பள்ளத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களே சோகத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகில் உள்ள சொக்கலிங்கபுரம் பெரியசாமி காலனியைச் சேர்ந்தவர் முப்புடாதி(33). இவர் மெக்கானிக்காக இருந்தார். இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் முப்புடாதியை விட்டுவிட்டு அவரது மனைவி பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் கடந்த சிலதினங்களாகவே கடுமையான மன உளைச்சலில் தவித்த முப்புடாதியை கடந்த இருதினங்களாகக் காணவில்லை. அவரது உறவினர்கள் அவரைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் சொக்கலிங்கபுரம் அருகில் உள்ள குறிப்பன்குளத்தில் முப்புடாதி சடலமாக மிதந்தார். மனைவி பிரிந்த ஏக்கத்தில் முப்புடாதி தற்கொலை செய்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. முப்புடாதி உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in