நெல்லை மாவட்டம் களக்காட்டில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரைக் கொலை செய்த கணவரை போலீஸார் இன்று கைது செய்தனர். குடும்ப சந்தோஷத்தையே சந்தேகம் கெடுத்துவிட்டதாக உறவினர்கள் புலம்பினர்.
திருநெல்வேலி மாவட்டம், மைலாப்புதூர் மேலூரைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன்(40) இவர் வாடகைக்கார் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி(34) காதலித்து இவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள்.இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள நம்பியாற்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஈஸ்வரி சடலமாகக் கிடந்தார். இதில் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது.
அவரிடம் நடத்திய விசாரனையில் மனைவியை அவரே கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மகாராஜனை இன்று போலீஸார் கைது செய்தனர். வாக்குமூலத்தில் அவர் போலீஸாரிடம் கூறுகையில், “இதற்கு முன்பு நான் மதுரையில் கார் ஓட்டிவந்தேன். அதனால் நானும், ஈஸ்வரியும் மதுரையில் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது என் மனைவி ஈஸ்வரியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி மோதலும் வந்தது.
இதனாலேயே சொந்த ஊருக்கு வந்தோம். துலுக்கர்பட்டி பகுதியில் வீடு எடுத்து தங்கினோம். நம்பியாற்றுப் பகுதிக்கு வந்தபோது இது பற்றி எங்களுக்குள் பேச்சு வந்தது. அது ஒருகட்டத்தில் வாக்குவாதமாக மாறியது. இதனால் நான் கோபம் அடைந்து, ஈஸ்வரியின் கழுத்தைப் பிடித்து நெரித்தேன். இதில் அவர் இறந்துவிட்டார். தொடர்ந்து ஈஸ்வரியின் சடலத்தை நம்பியாற்றில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டேன் ”என்று தெரிவித்தார்.