ஆசையை நிறைவேற்ற சொன்ன காதல் மனைவி; கொடூரமாக கொன்ற கணவன்: மாமியார் வீட்டில் நடந்த பயங்கரம்

சக்தி
சக்தி

வளைகாப்பு நடத்தச் சொன்ன காதல் மனைவியை கொடூரமாக கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் ( 20). காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் இவர் விருத்தாசலத்தில் ஒரு பேக்கரிக்கு வேலைக்கு வந்த வடக்கு பெரியார் நகரைச் சேர்ந்த லதா மகள் சக்தியை (18) காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் மணந்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பே சக்தி கர்ப்பம் அடைந்திருந்தார்.

தற்போது 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கியிருந்தார். எல்லா கர்ப்பிணிகளுக்கும் வரும் ஆசை சக்திக்கும் வந்தது. தனக்கும் வளைகாப்பு நடத்த வேண்டும் என தன்னுடைய கணவர் அற்புதராஜியிடம் ஆசை பொங்க கூறியிருக்கிறார். ஆனால் ஏற்கெனவே கடனில் வாழும் அற்புதராஜ் அதற்கு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள நிலைமையில் வளைகாப்பு நடத்த முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சக்தி தனது அலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என சக்தியின் தாய் லதாவிற்கு தகவல் தெரிவித்திருக்கிறார் அற்புதராஜ். அதனையடுத்து லதா உடனடியாக வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சக்தி சடலமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன.

இது பற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீஸார் சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சக்தியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் அவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அற்புதராஜை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது காதல் மனைவியை அற்புதராஜே அடித்துக் கொலைசெய்தது தெரியவந்தது.

அற்புதராஜ்
அற்புதராஜ்

வளைகாப்பு நடத்த வேண்டும் என்று சண்டையிட்ட சக்தியை வீட்டில் கிடந்த சாரணிக்கரண்டியால் தாக்கிபோது அவர் மயங்கி விழுந்ததாகவும், மேலும் ஆத்திரத்தில், அவரது கழுத்து, முகம் ஆகிய பகுதியில் கையால் குத்தியதாகவும் தெரிவித்த அற்புதராஜ், அவரை அப்படியே விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். பிறகு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் பேச்சுமூச்சில்லாமல் கிடந்ததையடுத்து தனது மாமியார் லதாவுக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர் வந்து பார்த்தபோது லதா இறந்து கிடந்ததாகவும் அற்புதராஜ் போலீஸிடம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அற்புதராஜை கைது செய்தனர். காதல் மனைவியை கைப்பிடித்த கணவனே கரண்டியால் அடித்து கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in