வங்கிக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?- சீக்ரெட்டை சொன்ன காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு

வங்கிக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?- சீக்ரெட்டை சொன்ன காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு

அரும்பாக்கம் தங்க நகை கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 31.7 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு கூறினார்.

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 13-ம் தேதி தனியார் நகைக்கடன் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகளை அந்நிறுவனத்தில் பணியாற்றிய முருகன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய கொள்ளையன் முருகன், சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்த நகையை உருக்குவதற்காக கருவியை வாங்கி கொடுத்து உதவிய கோயம்புத்தூரை சேர்ந்த நகை வியாபாரி ஸ்ரீவத்சவாவை கைது செய்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடரந்து கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைத்திருந்த காரணத்திற்காக ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்ஸி இந்திராவிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகள் முழுவதும் மீட்கப்பட்டதாக வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகளை முழுவதுமாக மீட்கப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கொள்ளையடித்த 6.5 கிலோ நகைகளை கொள்ளையன் சந்தோஷ், அவரது உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளோம். கொள்ளையடிப்பதற்கு முன் காவல் ஆய்வாளருக்கு இதில் தொடர்பு இல்லை.

கொள்ளையடித்த பிறகு நகைகளை மறைத்து வைக்க ஆய்வாளர் உதவி இருப்பது தெரிய வந்த காரணத்தினால், காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கொள்ளையன் சந்தோஷ் தொடர்பு கொண்ட செல்போன் எண்களை வைத்து ஆய்வு மேற்கொண்ட போது அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நகைகள் குறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மூன்று நாட்கள் மறைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளரின் மனைவி மற்றும் கொள்ளையனின் மனைவி உறவினர் என்பதால் இவ்வழக்கில் அவர்களுக்கு தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொள்ளையடித்த நகைகளை மிஷின் வாங்கி நகைகளை உருக்கியதால் நகை வியாபாரி ஸ்ரீவத்சவாவை கைது செய்துள்ளோம். முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையாக வைத்து கொள்ளையனை விரைவில் நெருங்க முடிந்தது. கொள்ளையர்கள் உறவினர்களை தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் அவர்களை நெருங்குவது சற்று சவாலாக இருந்திருக்கும். கொள்ளையில் ஈடுபட்ட முருகன் ஊழியர் என்பதால் வங்கியில் அலாரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். வங்கியில் அலாரம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in