1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தந்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து

1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தந்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து

1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது எனவும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அதிகமாக வீட்டுப் பாடம் கொடுப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 1-ம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் 3 பாடங்கள்தான் இருக்க வேண்டும் எனவும், பல பள்ளிகளில் 8 பாடங்கள் வரை கற்றுக் கொடுப்பதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் திறமையைக் கணக்கிட்டு மாணவர்கள் பிரித்து பயிற்சி கொடுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையம், ‘2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கப்படாது. 3-ம் வகுப்பு வரை மூன்றே பாடங்கள்தான் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் தங்களது பாடத் திட்டத்தைப் பின்பற்றும் 18,000 சிபிஎஸ்இ பள்ளிகளும் இதைப் பின்பற்ற வேண்டும்’ என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், ‘1 மற்றும் 2-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. இந்த மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். இதை மீறி தனியார்ப் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்து அந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வீட்டுப் பாடம் தரப்படவில்லை என்பதை அதிரடிப் படையினர் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in