மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கூலிப்படை ஏவி கொலை செய்த போலீஸ் ஏட்டு ஹரிஹரபாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், (45). இந்து மக்கள் கட்சி தெற்கு மாவட்ட துணைச்செயலாளராகவும் இருந்தார். அத்துடன் சோலையழகுபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். நேற்று முன் இரவு எம்கே புரம் அருகே மணிகண்டன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக்கொன்றது.
இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு ஏட்டு ஹரிஹரபாபு, அவரது கூட்டாளிகள் அன்புராஜன், அழகுபாண்டி, கார்த்தி, மணிகண்டன், பாண்டி, ஹைதர் அலி ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், நகைத்தொழிலுக்காக வாங்கிய கடனைத் திருப்பி தராததாலும், தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் மணிகண்டன் இருந்ததாலும் கூலிப்படையை ஏவி அவரை ஹரிஹரபாபு வெட்டிக்கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஏட்டு ஹரிஹரபாபுவை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.