தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்: புதிய மதிப்பீடு அடிப்படையில் இழப்பீடு வழங்க உத்தரவு

தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்: புதிய மதிப்பீடு  அடிப்படையில் இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீபெரும்புதூரில் தொழில் பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் உரிய  இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும்  அவைகளுக்கு  இழப்பீடு வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம்   2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்தது. எனவே புதிய சட்டத்தின் படி   குறிப்பிட்ட நிலத்திற்கு  சந்தை மதிப்பின் அடிப்படையில்  இழப்பீடு நிர்ணயிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி சவுந்தர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அவர்களின் தீர்ப்பில்,  "கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால், அந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும்" என தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

மேலும் "சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது.  கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்' என அறிவுறுத்திய நீதிபதிகள், " தொழிற்பூங்கா அமைக்க 2010-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை மீண்டும் நிர்ணயித்து வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in