கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம்: உயர்நீதிமன்றம் அனுமதி

கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம்: உயர்நீதிமன்றம் அனுமதி

மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட  கனியாமூர்  பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில்   உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்த  மாணவி மர்மமான முறையில்  மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும்  பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. எனவே பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தார். அதனையடுத்து நீதிபதி, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்கலாம்.  அதன் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் உத்தரவிட்டார்.

சில நாட்களுக்கு பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் மனு அளிக்கலாம். அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டுமெனவும்  உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in