கேரளத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கேரளத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைவரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கேரளத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு நல்லமழை பொழியும். அது வியாழக்கிழமை அதிகளவில் இருக்கும். வலுவான காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி வருவதால் நல்லமழை பெய்யும். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்கரைகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
இந்நிலையில் கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாக்குளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், பாலக்காடு, மளப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 11 செ.மீ வரையிலான மழை பொழிவுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், 11 முதல் 20 செ.மீ வரையிலான மழை பொழிவின் போது ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்படுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளதால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.