`6 மாவட்டங்களில் மிக கனமழை; 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்'- வானிலை ஆய்வு மையம் அலர்ட்

`6 மாவட்டங்களில் மிக கனமழை; 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்'- வானிலை ஆய்வு மையம் அலர்ட்

"தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 8-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 9-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 8 செ.மீட்டர் மழையும், கரூர் மாவட்டம் அணைபாளையத்தில் 7 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். லட்சத்தீவு பகுதிகள், கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in