
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள், 2 ஆண்டுகளுக்கு உடற்பயிற்சி மற்றும் அன்றாட பணிகளில் கவனமாக இருப்பது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலில் இருந்து உலகம் ஒருவழியாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியபோதும், அதன் இதர பாதிப்புகள் மற்றும் பக்கவிளைவுகள் தொடரவே செய்கின்றன. கொரோனா பலிகளின் எண்ணிக்கையை குறைத்து, அதன் பரவலை கட்டுப்படுத்தியதில் தடுப்பூசிகளுக்கு முக்கியப் பங்குண்டு. ஆனபோதும், தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பக்கவிளைவுகள் நேர்வதாக மக்கள் மத்தியில் பீதி எழுந்தது. இதனை அரசு மறுத்தபோதும், தடுப்பூசியின் பாதக விளைவு குறித்த விவாதங்கள் இன்றும் தொடரவே செய்கின்றன.
தடுப்பூசிக்கு அப்பால், கொரோனா பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்களுக்கு எழும் பக்க விளைவுகள் குறித்தும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு குறித்து அரசுகள் மறுப்பு தெரிவித்தபோதும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எழும் பக்கவிளைவுகளை அரசு மறுக்கவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மத்தியிலான அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் அதனையொட்டிய தரவுகளும் இந்த பக்கவிளைவுகளை உறுதிபடுத்துகின்றன.
கொரோனாவுக்கான தேசிய மருத்துவ பதிவகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றும் இது தொடர்பான அதிர்ச்சிகர விவாதங்களுக்கு வித்திட்டது. இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் ஒரு பிரிவான இந்த அமைப்பு, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மத்தியில், ஓராண்டுக்கு பின்னர் நடைபெறும் மரணங்களுடன் தொடர்புடைய காரணிகளை மதிப்பீடு செய்தது. 2020 செப்டம்பரில் இருந்து 2023 பிப்ரவரி வரை இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அதில், கொரோனா பாதிப்புக்கு பின்னான மரணத்திற்கான முக்கிய காரணங்களில், ரத்தம் உறைதல் ஏற்பட்டு, களைப்பு மற்றும் மூட்டு வலிகளுடன் மாரடைப்பும் ஏற்படுகிறது என தெரிய வந்தது. இருதய பாதிப்புகள் ஏற்படுவது மரணத்திற்கான முதல் காரணம். இவை தவிர்த்து நுரையீரல், சிறுநீரகம் ஆகியன முற்றிலும் செயலிழப்பதும் உயிரிழப்புக்கான காரணங்களாக தெரிய வந்தன.
இவை உள்ளிட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மக்கள் மத்தியிலான புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய அறிவுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் கடுமையான உடற்பயிற்சி மற்றும் பளுமிக்க பணிகளை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவுறுத்தலை 2 ஆண்டுகளுக்கு கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!