
மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணின் தலையில் காயத்தால் ஏற்பட்ட ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக, அவரின் தலையில் ஆணுறை அட்டையை வைத்து கட்டப்போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மொரேனா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஒரு பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்ட கட்டினை பிரித்தபோது, அதில் ஒரு ஆணுறை அட்டை இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.
இது தொடர்பாக விசாரித்தபோது, மொரேனாவில் உள்ள போர்சா அரசு சுகாதார மையத்தில் தலையில் காயத்தால் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக, காட்டன் துணியுடன் ஒரு ஆணுறை ரேப்பரும் வைத்து கட்டப்பட்டது தெரியவந்தது.
பெண்ணின் காயத்தின் தீவிரம் காரணமாக, மொரேனாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, “ அந்தப் பெண் ரேஷ்மா பாய் தர்ம்கரில் இருந்து வந்துள்ளார். டாக்டர் தர்மேந்திர ராஜ்பூத் அவசரப் பணியில் இருந்தார். வார்டு பாய் ஆனந்த் ராமிடம் டாக்டர் தர்மேந்திரா பருத்தித் திண்டுக்கு மேல் சில அட்டைகளை வைக்குமாறு அறிவுறுத்தினார், ஆனால் அவர் ஆணுறை பாக்கெட்டை வைத்திருந்தார்" என்று கூறினார்.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, போர்சா சுகாதார மையத்தின் வார்டு பாய் மாநில சுகாதாரத் துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.