
பள்ளி பருவத்தில் இருந்த காதலித்து வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, 68 லட்சம் பணம் பறித்து மோசடி செய்த வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாரா என்று சென்னை போரூர் ஏரியில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 1-ம் தேதி விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 10-ம் வகுப்பு படிக்கும்போது உடன் படித்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலித்து வந்தோம். பள்ளிப் படிப்பில் தொடங்கிய காதல் கல்லூரி படிப்பின் போதும் தொடர்ந்தது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னுடன் நிஷாந்த் பலமுறை பாலியல் உறவு கொண்டார். தன்னிடம் இருந்து 68 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, நிஷாந்த் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.
இதற்கிடையே சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் நிஷாந்துக்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் சிறு வயது முதலே தன்னை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி 68 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதுடன், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலன் நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு காதலன் நிஷாந்த், அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய மூவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடந்த மூன்றாம் தேதி தொழிலதிபர் மகளுடன் நிஷாந்துக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் அவர் மீது இளம்பெண் போலீஸில் புகார் அளித்திருப்பதை அறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தங்கள் மகளுடன் நிஷாந்துக்கு நடக்கவிருந்த திருமணத்தை தொழிலதிபர் குடும்பத்தினர் நிறுத்தியதுடன், திருமணம் நின்று போனதை தங்கள் உறவினர்களுக்கு செல்போனிலேயே குறுந்தகவல் அனுப்பி தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து நிஷாந்த் தலைமறைவானார். கடந்த 4 நாட்களாக நிஷாந்தை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்று தனது நண்பர்களோடு மது அருந்திய நிஷாந்த் பின்னர் நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், நல்ல நண்பர்கள் நீங்கள்; நான் வாழ தகுதியற்றவன், நாளை ஏதாவது ஒரு ஏரியில் எனது சடலம் மிதக்கும் என குறுந்தகவலில் தெரிவித்துள்ளார். உடனே நிஷாந்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச்ஆப் ஆகியிருந்தது. உடனே அவரது நண்பர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் போரூர் எஸ்.ஆர்.எம்.சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நிஷாந்தின் செல்போன் எண் போரூர் ஏரி அருகே ஸ்விட்ச் ஆனது தெரியவந்ததை அடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அவர் ஓட்டி வந்த கார் மட்டும் ஏரி அருகே இருந்ததை கண்டுபிடித்தனர். நிஷாந்த் கூறியது போல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பதை கண்டறிய விருகம்பாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் போரூர் ஏரியில் நிஷாந்த் உடலைதேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுவரை நிஷாந்த் உடல் கிடைக்கதாத நிலையில் உண்மையில் நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நாடகமாடுகிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீஸார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.