
120 கோடி ரூபாய் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக ஹவாலா முறையில் நிதி திரட்டி தீவிரவாத இயக்கங்களுக்குத் தடை செய்யப்பட்ட அமைப்புகள் வழங்கி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புள்ள நிறுவனங்களை மையப்படுத்தி அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
அப்போது பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையில் அந்நிறுவனங்கள் சுமார் 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி, அதை வங்கிகளில் செலுத்தி இருப்பது தெரியவந்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த தொகை உள்நாட்டிலும், வளைகுடா நாடுகளிலும் திரட்டப்பட்டு ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
அதனைத் தொடர்ந்து ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விருகம்பாக்கம், ராயபுரம், மண்ணடி உட்பட சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்று வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகர் 1-வது தெருவில் உள்ள ஷஃபியுல்லா என்பவரது வீடு மற்றும் அவரது சகோதரர்களான இனாயதுல்லா, ஷகீல் மற்றும் டெல்லியில் தொழில் செய்து வரும் மற்றொரு சகோதரரான நியமதுல்லா என்பவர்களுக்குச் சொந்தமான இடங்கள் என சென்னையில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், டெஸ்க்டாப் பொன்ற சாதனங்களை ஹவாலா முறையில் பணம் கொடுத்து வாங்கிக் சுங்கவரி செலுத்தாமல் முறைகேடாகக் கொண்டு வந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், சகோதரர்கள் 4 பேரும் தடைசெய்யப்பட்ட இயக்கமான எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், சோதனைக்குப் பின் முழு விவிரங்கள் வெளியிடப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.