பெட்டிக்கடைகளில் குட்கா ரெய்டு நடத்திய 2 போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள புதுப்பேட்டை பகுதியில் வாட்ட சாட்டமான இருவர் தங்களைப் போலீஸார் எனக்கூறி கடைகளில் ஆய்வு செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற கேள்வியோடு ஒவ்வொரு கடையாக அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் பணம் தரவேண்டும் என கடைக்காரர்களை மிரட்டத் தொடங்கினர். இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர்கள், இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தங்களைப் போலீஸ் எனக்கூறியவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள், கும்மிடிப்பூண்டியை அடுத்த கோரிமேட்டைச் சேர்ந்த சதீஷ்(38), ரெட்டம்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ்(35) என்பது தெரிய வந்தது. இவர்கள் போலீஸ் எனக்கூறி வசூலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களைப் போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுபோல் அவர்கள் எந்தப் பகுதியில் இப்படி வசூலில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.