மாமியாரிடம் முறையிட்ட மருமகள்: மாமனாரைத் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!
மாமனாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தலைமறைவான சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி வேலை செய்யும் இவர் தினமும் குடித்துவிட்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக அறியப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த அவரது மனைவி ராக்கம்மாள் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரண்டு தினங்கள் ஆன நிலையில் இதே பிரச்சினை தொடர்ந்து நீடித்ததால், காரைக்குடியில் இருக்கும் மாமியாரை சந்தித்து கணவரின் நடத்தை குறித்து அவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராக்கம்மாள் காரைக்குடி சென்றுள்ளார். இதை அறியாத அவரின் தங்கை மற்றும் தந்தை இருவரும் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது மைத்துனியை வீட்டில் பூட்டிவிட்டு நாட்டுத்துப்பாக்கியால் மாமனார் நாகப்பனைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிக் குண்டு விலா எலும்பில் பாய்ந்த நிலையில், அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குன்றக்குடி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ராமச்சந்திரனைத் தேடி வருகின்றனர்.