ஒரு பெண்ணிடம் தோழனாக நெருங்கிப் பழகிய டிரைவர் ஒருவர் அந்த பெண்ணை அழைத்துச் சென்று, தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 44 வயதான பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனை தரப்பினர் இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்களிடம் அந்தப் பெண் கூறுகையில், “என் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். என் குழந்தைகளை வளர்க்கவும், படிக்க வைக்கவும் குடும்ப சூழலைக் கருத்தில்கொண்டு திருநெல்வேலியில் வேலைக்கு சென்றுவந்தேன். எனக்கு வண்ணாரப்பேட்டை, சாலைத்தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. நல்ல தோழனாகப் பழகினார். அவர் என்னை ஆட்டோவில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு அழைத்துப் போனார். அப்போது அங்கு ஏற்கெனவே மறைந்து இருந்த அவரது நண்பர்கள் மணிகண்டன், பேராட்சி, அய்யாசாமி ஆகியோர் என்னைக் கொடூரமாகத் தாக்கி, பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து அவர்கள் தப்பியும் ஓடிவிட்டனர். வலி பொறுக்காமல் மருத்துவமனையில் சேர்ந்தேன்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்களைத் தேடிவருகின்றனர்.