நெல்லையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவால் மூன்று ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ்நிலையம் அருகே அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் நுழைவுச்சீட்டு பெற நோயாளிகளிடம் ரூ.100 லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை (நலப்பணிகள்) துணை இயக்குநர் டாக்டர் ராமநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த லஞ்ச விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று அந்த ஊழியரிடம்ம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்கள் மாரியப்பன், இசக்கியம்மாள், சாமிதுரை ஆகிய மூவரையும் வெவ்வேறு அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றம் செய்து சுகாதாரத்துறை (நலப்பணிகள்) துணை இயக்குநர் டாக்டர் ராமநாதன் உத்தரவிட்டுள்ளார்.