
74-வது குடியரசுத் தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் தேசியக்கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
நாட்டில் 74-வது குடியரசுத் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொடியேற்றி வைத்தார். தமிழகத்தில் மெரினா கடற்கரைச் சாலையில் குடியரசுத் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள மனைவியுடன் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னதாகவே வந்திருந்து சிரித்த முகத்துடன் கைகுலுக்கி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசியக் கொடியை ஆளுநர் ரவி ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
அதன் பின் நடைபெற்ற முப்படையினரின் அணிவகுப்பையும், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார். ஆளுநரும் முதல்வரும் மனமாச்சரியங்கள் மறந்து முகமலர்ச்சியுடன் சந்தித்துக் கொண்டதும், தத்தம் மனைவியுடன் விழாவிற்கு வந்திருந்ததும் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தட்டும். தமிழ்நாடு வாழ்க என்று ஆளுநர் நேற்று முழக்கமிட்டு இருந்ததும், முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விருந்துக்கு வருமாறு தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு அழைத்ததும், அதன் விளைவாக இன்று இருவரும் முகமலர்ச்சியுடன் சந்தித்துக் கொண்டதும் இரண்டு தரப்புக்கு இடையே இருந்த இறுக்கத்தை குறைத்திருக்கிறது.