தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என மின்சார வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும். 58 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1.12.2019 முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மின்சார வாரிய ஊழியர்கள் கோட்டையாக பேரணியாக சென்றனர்.
இதனைத்தொடர்ந்து பேரணியில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். மின்வாரியத்தில் 86 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்க வேண்டும். கோரிக்கைகளின் மீது வாரிய நிர்வாகம் பலமுறை அழைத்து பேசி முடிவு பெறாமல் உள்ளது.
எனவே, கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பது மின்வாரிய பணியாளர்கள் மத்தியில் தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி விடும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது’’ என்றனர்.