வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்!

அரசுப்பள்ளிகள் குறித்து நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்!

அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல.. பெருமையின் அடையாளம் என குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், மாணவர்களுக்கான புதியன விரும்பு என்ற 5 நாள் கோடை கால பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும் போது, “கோடை விடுமுறை காலத்தை பயனுள்ள வகையிலும் மாணவ மாணவிகளின் தனித்திறமையினை வெளிக் கொணரும் விதமாகவும் ’புதியன விரும்பு’ என்ற தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் பாடங்களை மட்டும் கற்பதை காட்டிலும் மனித உரிமைகள், தன்னம்பிக்கையுடன் வாழ்வது, நிர்வாகத் திறமை, கலை இலக்கியம் மற்றும் தன்னுள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரவும் தெரியாததைக் கற்றுக் கொள்ளவும் இந்த 5 நாள் பயிற்சி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல...பெருமையின் அடையாளம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மலையோர மாவட்டங்களில் இலவச பேருந்து அட்டைகளுக்கு ஏற்ப பேருந்து வசதி இல்லை. இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கவுள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in