அலுவலகத்தில் சிகரெட் பிடித்த அரசு அதிகாரி: புகைப்படம் எடுத்த பொதுமக்கள்: அதிரடி காட்டிய கலெக்டர்!

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்

அலுவலகத்தில் புகைபிடித்த திருமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை பணி இடைநீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 ஒன்றியங்களில் ஒன்றான திருமங்கலம் ஒன்றியத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சௌந்தரராஜன். இவர் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய அவருடைய அலுவலகத்திலேயே அவ்வப்போது புகை பிடித்து வந்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இச்சூழலில், அலுவலகத்திற்கு சென்ற ஒருவர் சௌந்தரராஜன் புகை பிடிப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து, அதனை நேரடியாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளார். மேலும், இது தொடர்பாக புகார் மனு ஒன்றையும் அளித்திருந்தார். புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு குழு அமைத்திருந்தார் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்.

பணி இடைநீக்க ஆணை
பணி இடைநீக்க ஆணை

இக்குழுவினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அலுவலகத்தில் தொடர்ந்து புகை பிடித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் மதுரை மாவட்டத்தைத் தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in