சிங்கப்பூரிலிருந்து லேப்டாப் சார்ஜரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அண்மைக் காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அனைத்து விமானங்களிலும் வரும் பயணிகளை மிக தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் இதுவரை பிடிபட்டிருக்கிறது.
இந்தநிலையில் இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வரும் ஸ்கூட் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக தீவிரமாக சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்ட ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது, அவர் தனது லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து எடுத்து வந்த 30 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்புள்ள 502 கிராம் கடத்தல் தங்கத்தை கண்டறிந்தனர். அதை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள். பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.