திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணி ஒருவரிடம் இருந்து செல்போன் மூலம் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத் தகடுகள் உட்பட 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக இந்த விமான நிலைய வழியாக தங்கம் உள்ளிட்டவை கடத்தல் அதிகமாக நடைபெறுகிறது.
குறிப்பாக இங்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பயணிகள் அதிக அளவில் தங்கத்தைக் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து அந்த விமானத்தில் திருச்சி வந்த பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது 179 கிராம் எடை கொண்ட ஒரு தங்கச்சங்கிலி, செல்போன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட செவ்வக வடிவிலான 360 கிராம் எடை கொண்ட 12 மெல்லிய தங்க தகடுகளையும் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 539 கிராம் எடை கொண்ட ரூ.31.62 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.