திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயணி ஒருவர் கடத்தி வந்த 128 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ள நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிரமாக தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சோதனையில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து ஏராளமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுடன் குருவி எனப்படும் கடத்தல் மற்றும் வணிகம் தொழிற்சார்ந்த பயணிகளும் வருகின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள பொருட்களை வாங்கிக் கொண்டு இந்தியா வருவதும், இந்தியாவில் விலை மலிவாகவும், வெளிநாடுகளில் கிடைக்காத பொருள்களை வெளி நாடுகளுக்கு கொண்டு கொடுப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆண் பயணியை தனிமைப்படுத்தி தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரிடமிருந்து 128 கிராம் எடைகொண்ட 6.51 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.