சுற்றிவளைத்த கடலோரக் காவல்படை; நடுக்கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள்: சிக்கிய கடத்தல்காரர்கள்

சுற்றிவளைத்த கடலோரக் காவல்படை; நடுக்கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள்: சிக்கிய கடத்தல்காரர்கள்

மன்னார் வளைகுடா நடுக்கடலில் வீசப்பட்ட மூடையில் தங்கக்கட்டிகள் இருந்ததா என மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்படுகிறது. இதற்கு மாற்றாக இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுகின்றன.

கடந்த 2 மாதங்களில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வந்தபோது மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிக்கியவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடல் வழியாக கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதன்படி, இந்திய கடலோரக்காவல் படையினருடன் இணைந்து ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடலில் மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் ரோந்து சென்றனர்.

ரோந்து படகு வருவதையறிந்த நாட்டுப்படகு ஒன்றில் இருந்த ஒரு மூடையை நடுக்கடலில் தூக்கி எறிந்தனர். அப்படகை சுற்றி வளைத்த அதிகாரிகள் படகிலிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் கும்பல் எனவும், மண்டபம், வேதாளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.

கடத்தல் தொழிலை வழக்கமாக கொண்ட அவர்கள் வேதாளையைச் சேர்ந்த கடத்தல் புள்ளி ஒருவருக்கு இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகைளை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் வீசிய மூடையில் 15 முதல் 20 கிலோ தங்கக்கட்டிகள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. நடுக்கடலில் வீசிய அந்த மூடையை மீட்கும் நடவடிக்கையில் கடலோரக்காவல் படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பாம்பன், மண்டபம் கடற்பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in