
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி வீட்டிற்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து, சுவாதியை வரும் 30-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம், அன்றைய தினம் சுவாதி ஆஜராக வேண்டும். அப்போதும் இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.
இதனிடையே, நீதிபதிகளின் உத்தரவுப்படி, சுவாதி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் எங்கு செல்கிறார் என்பது குறித்தும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.