நாளை பக்ரீத் பண்டிகை: ஒரே நாளில் எட்டயபுரம் சந்தையில் 7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாளை பக்ரீத் பண்டிகை:  ஒரே நாளில் எட்டயபுரம் சந்தையில் 7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை நாளை என்பதால் தூத்துக்குடி, எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் நேற்று மாலை முதல் விடிய, விடிய ஆடுவிற்பனை களைகட்டியது. இதில் இன்றுகாலை நிலவரப்படி 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்குவந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

இங்கு சாதாரண வாரங்களிலேயே ஒருகோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். இருந்தும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இன்னும் அதிகதொகைக்கு ஆடுகள் விற்பனையாகும். அந்தவகையில் நாளை பக்ரீத் பண்டிகையை ஒட்டி நேற்று மாலை முதலே எட்டயபுரம் ஆடு சந்தை களைகட்டத் தொடங்கிவிட்டது. விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை அழைத்துவந்தனர். இதனால் நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரை மட்டும் 7 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் சந்தைக்குள் வர முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

விலை எவ்வளவு?

இந்த முறை ஆடுவளர்ப்போருக்கும் கணிசமான லாபம் கிடைத்துள்ளது. 7 கிலோ எடை கொண்ட சின்ன குட்டி ஆடுகளே குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. இதேபோல் ஜோடி ஆடுகள் நாற்பதாயிரம் ரூபாய்வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in