குறைந்தபட்சம் 8 ஆயிரம், அதிகபட்சம் 40 ஆயிரம்; விடிய விடிய நடந்த ஆட்டுச்சந்தை: கோடிகளை அள்ளிய வியாபாரிகள்!

குறைந்தபட்சம் 8 ஆயிரம், அதிகபட்சம் 40 ஆயிரம்; விடிய விடிய நடந்த ஆட்டுச்சந்தை: கோடிகளை அள்ளிய வியாபாரிகள்!

தீபாவளிப் பண்டிகை நாளை மறுதினம் என்பதால் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் நேற்று மாலை முதலே விடிய, விடிய ஆடு விற்பனை களைகட்டியது. இதில் இன்றுகாலை நிலவரப்படி 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்குவந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

இங்கு சாதாரண வாரங்களிலேயே ஒருகோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். இருந்தும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இன்னும் அதிகதொகைக்கு ஆடுகள் விற்பனையாகும். அந்தவகையில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி நேற்று மாலை முதலே எட்டயபுரம் ஆட்டுச் சந்தை களைகட்டத் தொடங்கிவிட்டது. விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை அழைத்துவந்தனர். இதனால் நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரை மட்டும் 7 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. நேற்று தொடங்கி, இன்று காலைவரை மட்டும் 12,000 ஆடுகள் விற்பனையாகி உள்ளது. 7 கிலோ எடை கொண்ட சின்ன குட்டி ஆடுகளே குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. இதேபோல் ஜோடி ஆடுகள் நாற்பதாயிரம் ரூபாய்வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளியை ஒட்டி இன்றும், நாளையும் இன்னும் அதிகளவில் ஆடுகள் விற்பனையாகும் என்பதால் நிகழாண்டில் எட்டயபுரம் சந்தையில் 25 கோடிக்கும் அதிகமான தொகையில் ஆடுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in